தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜாம் புயலானது வட தமிழகம் நோக்கி நகர்ந்துவரும் சூழலில், பலத்த காற்று, மிக கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு இன்றும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலட் விடப்பட்டிருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாகி உருவாகி, காலை 08:30 மணியளவில் சென்னைக்குத் தென்கிழக்கு சுமார் 290 கி.மீ தொலைவில் நிலைகொண்டது.

பாலச்சந்திரன்

மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல் வடமேற்கு திசையில் தீவிர புயலாக வலுப்பெற்று நகர்ந்து, நாளை மாலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டியிருக்கும் பகுதியில் நிலைகொள்ளும். பின்னர் வடக்கு திசையில், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி காலை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும். அடுத்துவரும் இரண்டு தினங்களுக்கு, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரையில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

ரெட் அலர்ட்

மேலும், இன்று திருவள்ளூர் முதல் கடலூர் வரை கடலோர மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் பலத்த தரைக் காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக் கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 80 கி.மீ வேகத்திலும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரிப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் டிசம்பர் 5-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.