இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி தோல்வியைத் தழுவி உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது ஒட்டு மொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இதனிடையே ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், வெற்றிக் கொண்டாட்டங்களின் போது உலகக் கோப்பையின் மீது கால் வைத்து அமர்ந்திருந்து எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக் கோப்பை மீது கால் வைத்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறி மிட்செல் மார்ஷ் மீது காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்திருந்தார்.
பலரும் மிட்செல் மார்ஷிற்கு ஆதரவாகவும் எதிராகவும் வலைதளங்களில் கருத்துகளையும் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் உலகக்கோப்பையின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தது குறித்து மிட்சல் மார்ஷ் விளக்கமளித்திருக்கிறார்.
இது குறித்துப் பேசிய அவர், “அந்தப் புகைப்படத்தில் அவமரியாதையான எந்த விஷயத்தையும் நான் காணவில்லை. சமூகவலைதளங்களில் அந்தப் புகைப்படம் வைரலானதாக பலரும் சொன்னார்கள். ஆனால், நான் அதைப் பற்றிப் பெரிதாகச் சிந்திக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் பெரிதாக எதையும் பார்க்கவில்லை. அந்தப் புகைப்படத்தில் எதுவுமே இல்லை, அவ்வளவுதான்” என்றார்.
மேலும், உலகக்கோப்பையை முடித்துவிட்டு நாடு திரும்பாமல் இந்தியாவிற்கு எதிராக டி20 போட்டிகளில் ஆடி வரும் ஆஸ்திரேலிய வீரர்களைப் பற்றியும் நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.
“ஆஸ்திரேலியாவிற்காக விளையாடுகிறோம். அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கு எதிரான தொடர் என்றால் அது எப்போதுமே மிகப்பெரியது. உலகக்கோப்பையை வென்றதும் நாடு திரும்பாமல் டி20 தொடருக்காக ஆறு வீரர்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் தங்கி விளையாட வேண்டியிருந்தது. அது மிகவும் கடினமாக இருந்தது. உலகக் கோப்பையை வென்றதைக் கொண்டாட அவர்கள் நாடு திரும்பி தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருந்திருக்கலாம். இந்தியாவிலேயே தங்கி விளையாடிய ஆறு வீரர்களின் சார்பாகவும்தான் நான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன்” என்றார்.