கடந்த இரண்டு நாள்களாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிக கனமழை எனப் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், அடுத்த 24 நான்கு மணி நேரத்துக்கு சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை இருக்கும் என்றும், டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரக் கடல் பகுதியில் புயல் நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

கனமழை

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை விவரித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தொடர்ந்து நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

பின்னர், இந்த வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதே பகுதியில் டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். அதையடுத்து, வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரக் கடல் பகுதியில் புயலாக நிலவக்கூடும். அடுத்து வரும் நான்கு தினங்களைப் பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

வங்கக் கடல்

மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிலும், டிசம்பர் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.