சென்னை நெசப்பாக்கம், பாரதி நகர், ராமதாஸ் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் 26.11.2023-ம் தேதி தன்னுடைய நண்பர்களுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் நண்பர்கள், பாலாஜியிடம் மது அருந்தப் பணம் கேட்டிருக்கிறார்கள். பணம் கொடுக்க பாலாஜி மறுத்ததால், அவரின் நண்பர்கள் அவரைத் தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த பணம், இரண்டு செல்போன்கள், டி.வி, காஸ் சிலிண்டர் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு, சென்றுவிட்டனர். இது குறித்து பாலாஜி, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
பாலாஜி கொடுத்த தகவலின்படி அவரின் நண்பர்களான நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித், சூளைபள்ளத்தைச் சேர்ந்த மணிகண்டன், நெசப்பாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த நேசமணி ஆகிய மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து பணம், இரண்டு செல்போன்கள், டி.வி, காஸ் சிலிண்டர் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான மணிகண்டகன், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியாவார். இவர்மீது வீடு புகுந்து திருடுவது உட்பட 20 குற்ற வழக்குகள் இருக்கின்றன. கைதான மூன்று பேரும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள்.