சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, “இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் நலத்துறை ஆய்வு மேற்கொண்டு, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென அறிவுறுத்தியிருக்கும் நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் இந்த டெண்டரை கோரியிருக்கக் கூடாது” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகரப் பேருந்து

அதையடுத்து, “தொழிலாளர் நலத்துறை ஆணையரின் அறிவுறுத்தலுக்கு எந்த சட்டபூர்வ அதிகாரமும் இல்லை. பல ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வராததால் ஏற்பட்ட ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், நிரந்தர ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும் தடுக்கப்படும்” என, அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது, ஊதிய முரண்பாடுக்கு வழி வகுக்கும். இது அபாயகரமான சோதனை. தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால், இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாது. தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படும் ஓட்டுநர்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும்.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் மட்டுமல்லாமல், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோரின் காலிப் பணியிடங்களை, நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்” எனக் கூறி, டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.