`கிளியே கிளியே மணி மணி மேகத்தோப்பில்… ஒரு மலர் நுள்ளான் போகும் அழகின் அழகே’ இன்ஸ்டா ரீல்ஸில் இளைஞர்களின் லேட்டஸ்ட் கீதமாய் வைப் ஏற்றிக்கொண்டிருக்கிறது.
இளையராஜா இசையமைத்த ‘ஆ ராத்திரி’ படத்தில் வரும் இப்பாடலை, பாடகி ஜானகி தனது கொஞ்சல் குரலால் பாடி நம் வீட்டுச் செல்லங்களைச் செல்லம் கொஞ்சம் வைப்பார். பாடலுக்கேற்ப நடிகை பூர்ணிமா பாக்யராஜும் ரோகிணியும் போட்டிப்போட்டு பேபி அஞ்சுவை விளையாட்டுக் காட்டி கொஞ்சுவார்கள். 1983-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் பாடல், 40 ஆண்டுகள் கழித்து தற்போது சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த நிலையில், நடிகை பூர்ணிமா பாக்யராஜிடம் இது குறித்துப் பேசினோம்…
“இத்தனை வருசம் கழிச்சு இந்தப் பாடல் இப்போ கொண்டாடப்படுறது நெகிழ்வாவும் சந்தோஷமாவும் இருக்கு. ‘ஆ ராத்திரி’ உண்மையா நடந்த சம்பவம். அதை ரொம்ப உணர்வுப்பூர்வமா இயக்கினார் ஜோஷி. மம்மூட்டி சார், நான், ரோகிணி, பேபி அஞ்சுன்னு பலர் நடிச்சிருந்தோம். படத்துல ஒரு அசம்பாவிதம் நடக்கும். அதுக்கு முன்னாடி, குடும்பத்தோட பிக்னிக் போகும்பொது வரக்கூடிய சந்தோஷமான பாட்டு அது.
பெருசா டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் கிடையாது. அதனால, ரெண்டே நாள்ல ‘கிளியே கிளியே’ பாட்டை எடுத்து முடிச்சுட்டாங்க. அப்பவே, ஷூட்டிங்ல இந்தப் பாட்டை ஜாலியா பாடிக்கிட்டிருப்போம். இந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்னு சொன்னப்போ, மம்மூட்டி சார் மறுத்துட்டார். அவர் எப்பவுமே இப்படித்தான். அவருக்காகவே, இந்தப் பாட்டை மான்டேஜ்லயே எடுத்தாங்க. படம் ரிலீஸானதும் பெரிய சக்சஸ் ஆச்சு. ‘கிளியே கிளியே’ பாட்டும் செம ஹிட். எல்லா இடத்திலும் இந்தப் பாட்டுத்தான் ஒலிச்சுட்டே இருக்கும். இப்போ 40 வருஷத்துக்கப்புறம் டிரெண்டிங்ல வரும்னு எதிர்பார்க்கவே இல்ல.
‘அம்மா உங்கப் பாட்டு ட்ரெண்டிங்ல இருக்கு’ன்னு என் பிள்ளைங்களே ஆச்சர்யப்பட்டு சொல்றாங்க. அது எப்படி நடக்குதுன்னே தெரியல. நான் நடிக்கும் படங்களில் எல்லாமே நல்ல பாடல்களாத்தான் அமைஞ்சிருக்கு. அப்படித்தான், இந்தப் பாட்டும்! ராஜா சாரோட இனிமையான இசையில ஜானகி மேடம் அற்புதமா பாடியிருந்தாங்க. இப்போ, இருக்கிற மாதிரி சோசியல் மீடியால்லாம் அப்போ இருந்திருந்தா ‘கிளியே கிளியே’ இன்னும் பெரிய ரீச் ஆகியிருக்கும். எப்படியோ இப்போ தோண்டியெடுத்துட்டாங்க. அதுல, எனக்குப் பெரிய சந்தோஷம்தான்” என்கிறார் நினைவுகளைப் பகிர்ந்தபடி!