ஹரியானா மாநிலத்தின், ஜீந்த் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் 50 மாணவிகளைத் தலைமை ஆசிரியர் பாலியல் துன்ப்புறுதலுக்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்படும் தலைமை ஆசிரியரின் பெயர் கர்த்தார் சிங் (55). அரசியல் பின்புலமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படும் இவர், ஆறு வருடங்களாக இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியன்று குடியரசுத் தலைவர், பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி, மத்திய மகளிர் ஆணையம், ஹரியானா மாநில மகளிர் ஆணையம், ஹரியானா கல்வி அமைச்சர் ஆகியோருக்கு பெயர் எதுவும் குறிப்பிடப்படாத கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில், தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெளியிலிருந்து பார்த்தால் எதுவும் தெரியாத கருப்பு கண்ணாடி அறைக்குள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதுபற்றி வெளியில் கூறினால் தேர்வுகளில் ஃபெயில் ஆக்கிவிடுவேன் என்று தலைமை ஆசிரியர் மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு, பள்ளியிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் ஆசிரியை ஒருவர், மாணவிகளை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் பூதாகரமாக வெடிக்கவே, இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஹரியானா காவல்துறைக்கு, செப்டம்பர் 14-ம் தேதியன்று ஹரியானா மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், உத்தரவுக்குப் பிறகு ஒரு மாதத்துக்கும் மேலாக எந்த நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை. அக்டோபர் 27-ம் தேதி கர்த்தார் சிங்கை சஸ்பெண்ட் செய்த கல்வித்துறையும், வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்னர் ஒருவழியாக அக்டோபர் 31-ம் தேதியன்று கர்த்தார் சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இன்னொருபக்கம், இந்த விவகாரத்தில், டி.எஸ்.பி அமித் பாட்டியா, மகளிர் காவல் நிலைய அதிகாரி முகேஷ் ராணி, உச்சன கலான் காவல் நிலைய அதிகாரி பல்வான் சிங், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம குமாரி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா, “மாணவிகளிடமிருந்து 60 எழுத்துப்பூர்வ புகார்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதில் 50 புகார்கள், குற்றம்சாட்டப்பட்டவரால் உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிகளின் புகார்கள். மேலும், தலைமையாசிரியர் இவ்வாறு செய்தது தங்களுக்குத் தெரியும் என்று 10 சிறுமிகள் புகாரளித்திருக்கின்றனர். ஆரம்பத்தில், சில பெண் மாணவிகளிடமிருந்து செப்டம்பர் 13 தேதியன்று ஒரு புகாரைப் பெற்றோம். அடுத்தநாளே, காவல்துறைக்கு அனுப்பினோம். செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 29 வரை, அவர்கள் நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று காவல்துறையின் மந்தமான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டினார்.
அதோடு, இந்த விஷயம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமலிருந்த மாவட்ட பெண் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த பெண் ஆசிரியை மீது ஆணையம் விசாரணை நடத்திவருவதாகவும் தெரிவித்தார். இன்னொருபக்கம் இதில் விசாரணை நடத்திவந்த சிறப்பு புலனாய்வு குழு, கடந்த கர்த்தார் சிங்கை கைதுசெய்தது. அவரின், செல்போன், சிம் கார்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
10-ம் வகுப்பு மாற்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை வைத்திருக்கும் இந்த அரசுப் பள்ளியில் நேர்ந்த இத்தகைய மோசமான சம்பவம் வெளிவரும் வரை இதுபற்றி தங்களுக்கே தெரியாது என்று அதிர்ச்சியாகக் கூறுகின்றனர் பிற ஆசிரியர்கள். இத்தனைக்கும், அந்தப் பள்ளியில் பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழு இருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடத்தில் இந்த சம்பவம் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கும் குழந்தைகள் நல அதிகாரி, எதிர்காலத்தில் இதில் புதிய விஷயங்களும் வெளிவரலாம் என்று கூறுகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.