ஹமாஸ் படையின் கோட்டையாக காஸா விளங்கிவருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவரும் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது காஸா நகரை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்திருக்கிறது. உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தவிருப்பதால், காஸாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘தற்போது நடைபெற்றுவரும் சண்டை முடிவுக்கு வந்த பிறகும், காஸா நகர் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்திவரும் தாக்குதலில் 10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் சிறார்கள். இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 2,660 பேர் மாயமாகியிருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் தரப்பு, தங்கள் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோரை கொல்லப்பட்டதாகவும், ஹமாஸின் தாக்குதலில் 1,450 பேர் உயிரிழந்ததாகவும் கூறுகிறது.
காஸா பகுதியிலிருந்து 2005-ம் ஆண்டு இஸ்ரேல் வெளியேறியது. அதன் பிறகு, அந்தப் பகுதியை ஆயுதம் தாங்கிய ஹமாஸ் படை கைப்பற்றியது. அதிலிருந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்றுவருகிறது. பல முறை மிகப்பெரிய போராகவும் அது மாறியிருக்கிறது. திடீரென்று, கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர், சுமார் 1,200 பேரை கொலை செய்தனர். அந்த கொடூரமான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், காஸாவில் 10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காஸாவில் உணவு, குடிநீர், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் செல்ல இஸ்ரேல் தடைவிதித்தது.
ஹமாஸ் படையை முற்றிலும் அழிக்கும் வரையில் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக அறிவித்தார். தற்போது, காஸாவை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டிருக்கிறது.
இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்று பேட்டியளித்த நெதன்யாகு, ‘காஸாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்புடையதாக இல்லை. ஆனாலும், அந்தப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்லவும், பிணைக் கைதிகளை மீட்பதற்கு வசதியாகவும் சிறிய அளவில் தாக்குதல் நிறுத்தத்தை மேற்கொள்ளத் தயார்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், இந்தப் போர் முடிந்த பிறகு காஸாவை முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என்று சூசகமாக நெதன்யாகு கூறியிருக்கிறார். இஸ்ரேல் மீது ஹமாஸ் படை திடீர் தாக்குதலை மேற்கொண்ட பிறகு, திட்டமிட்ட தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது என்றாலும், அது பாலஸ்தீன ஆதரவு குழுக்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று சர்வதேச அளவிலான பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவித்தனர். அதுதான் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.