நடப்பு உலகக்கோப்பையின் மிகச்சிறந்த இன்னிங்ஸை மேக்ஸ்வெல் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடியிருந்தார். தனி ஆளாக அணியை வெல்ல வைத்ததோடு இரட்டை சதத்தையும் அடித்திருந்தார்.
மேக்ஸ்வெல் இப்படி அசாத்தியமான இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பெவிலியனில் ஒரு சுவாரஸ்யமாம விஷயத்தை கடைபிடித்திருக்கின்றனர்.
மேக்ஸ்வெல் 91-7 என்கிற மோசமான நிலையிலிருந்து அணியை மீட்டெட்டுத்து வெல்ல வைத்தார். மேக்ஸ்வெல் கொஞ்சம் நன்றாக ஆடி நம்பிக்கை கொடுக்கத் தொடங்கிய சமயத்தில் பெவிலியனிலும் ட்ரெஸ்ஸிங் ரூமிலும் ஒவ்வொரு ஆஸி வீரரும் எந்த எந்த இடத்தில் அமர்ந்திருந்தார்களோ அதே இடத்தில்தான் கடைசி வரை நகராமல் அமர்ந்து போட்டியைப் பார்த்திருக்கின்றனர். 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கபில்தேவ் ஒரு அசாத்தியமான இன்னிங்ஸை ஆடி 175 ரன்களை எடுத்திருப்பார். அந்தப் போட்டியில் கபில்தேவ் ஆடத் தொடங்கிய சமயத்திலும் டிரெஸ்ஸிங் ரூமில் எல்லா வீரர்களும் எங்கெங்கே உட்காந்திருந்தார்களோ அதே இடத்தில்தான் கடைசி வரை உட்காந்து போட்டியை பார்த்திருக்கின்றனர். 83 படத்திலுமே கூட இந்தக் காட்சியை சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
நிகழாது என நினைக்கப்பட்ட அதிசயம் நிகழ்கையில் வேடிக்கையாக பின்பற்றப்படும் நம்பிக்கை இது. இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் பேசுகையில், ‘நான் ஜார்ஜ் பெய்லி மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். ஆடம் ஜம்பா கொஞ்சம் பதற்றமாக இருந்தார். பவுண்டரி லைனுக்கும் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கும் இடையே நடந்துகொண்டே இருந்தார். நாங்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததை உணரவே இல்லை.
அங்கு நடந்தவையெல்லாம் எங்களை அப்படி மெய்மறக்கச் செய்துவிட்டது. மேக்ஸ்வெல்லிடமிருந்து கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் அதிவேகமான சதம் ஒன்று வந்திருந்தது. வேறு யாராலும் மேக்ஸ்வெல்லுக்கு இணையாக இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடவே முடியாது என நினைக்கிறேன்.’ என ஹேசல்வுட் கூறியிருக்கிறார்.