தென்காசியில் அரைநிர்வாண கோலத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்க முயன்ற நபரை, போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசிய போலீஸார், “தென்காசி மாவட்டம், நடுபல்க் சந்திப்பு அருகேயுள்ள பஜார் வீதியில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் அமைந்திருக்கிறது. இந்த ஏ.டி.எம்மில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது. இது தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், தென்காசி குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வந்தார். மேலும், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அப்போது, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அரை நிர்வாணத்துடன் உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஏ.டி.எம் இயந்திரத்தை பலவழிகளிலும் உடைத்துப் பணத்தைத் திருட முயற்சி செய்தது பதிவாகியிருந்தது. தொடர்ந்து, தன் உடல் பலத்தால் ஏ.டி.எம் இயந்திரத்தை இரண்டாக உடைக்க முயன்றும், அவரின் முயற்சி முழுமையடையாததால், சோர்ந்துபோன அந்த நபர், ஏ.டி.எம் இயந்திரத்தைத் திட்டியபடியே அங்கிருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷின் நடமாட்டத்தைக் கண்காணித்த போலீஸார், அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
தென்காசிக்கு வேலைக்காக வந்த ராஜேஷ், நடுபல்க் சந்திப்பு அருகே விடுதியில் தங்கியிருந்து, ஏ.டி.எம்-ஐ நோட்டமிட்டு வந்திருக்கிறார். ஏ.டி.எம்மில் பணம் நிரப்பப்பட்டதைத் தெரிந்துகொண்ட ராஜேஷ், இரவில் ஏ.டி.எம்முக்குள் புகுந்து இயந்திரத்தை உடைத்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார். ராஜேஷைக் கைதுசெய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குற்ற வழக்கில் விரைவாகச் செயல்பட்டு, குற்றாவாளியைக் கைதுசெய்த போலீஸாருக்கு, தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பாராட்டுகளைத் தெரிவித்தார்” என்றனர்.