மகாராஷ்டிராவில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இது வெளியில் தயார் செய்து கொண்டு வந்து பள்ளிகளில் சப்ளை செய்யப்படுகிறது. எப்போதும் கிச்சடி எனப்படும் சாம்பார் சாதம் போன்ற ஒரு உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும் மும்பை போன்ற நகரங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக குடிசைப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சேர்த்து முட்டை மற்றும் வாழைப்பழம் கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முட்டை

மாநில பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களுக்கு மதிய உணவில் எந்த மாதிரியான உணவு கொடுக்கலாம் என்று ஆலோசனை வழங்குவதற்காக பிரபல ரெஸ்டாரன்ட்களில் சமையல் கலைஞராக இருக்கும் விஷ்ணு மனோகர் என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்து இருந்தது. அக்கமிட்டி தனது அறிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்துள்ளது.

அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் அரசு நடத்தும் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் மதிய உணவில் முட்டை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முட்டையை அவித்து அல்லது முட்டை பிரியாணியாகக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேவையான ஊட்டச்சத்து பெறும் வகையில் மதிய உணவில் முட்டை மற்றும் வாழைப்பழம் கொடுக்க முடிவு செய்திருப்பதாக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”வாரத்தில் புதன், வெள்ளிக்கிழமைகளில் அவித்து, அல்லது பிரியாணி/புலாவுடன் சேர்த்து முட்டை கொடுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சைவ சாப்பாடு சாப்பிடும் மாணவர்களுக்கு அன்றைய தினம் வாழைப்பழம் வழங்கப்படும். மதிய உணவில் தினமும் இனிப்பு சேர்த்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புரோட்டீன் சத்து அதிகமாகக் கிடைக்கும் வகையில் சோயா பால் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சோயா பால் தயாரிக்கும் கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

பள்ளிக் குழந்தைகள்

பள்ளிகள் உள்ளூரில் 5 ரூபாய்க்கு மிகாத வகையில் முட்டை வாங்கிக்கொள்ளும் படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது முட்டை வெளிச்சந்தையில் 7 ரூபாய் வரை விற்பனையாகிறது. அப்படி இருக்கும்போது எப்படி 5 ரூபாய்க்கு முட்டை வாங்குவது என்று பள்ளி ஆசிரியர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

இத்திட்டத்தால் மாநிலம் முழுவதும் 1.12 கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள். மும்பையில் 7.50 குழந்தைகள் பயன்பெறுவார்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டில் 12 மாநிலங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.