ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட பல வகை விலங்குகளும், அரிய வகை தாவரங்களும் உள்ளன. வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமராவதி வனச்சரகத்தின் அமராவதி பிரிவு, கல்லாபுரம் கழுதைக் கட்டி ஓடைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு ஆண் புலி இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியன், துணை இயக்குநர் தேவேந்திர குமார் மீனா, உதவி இயக்குநர் கணேஷ்ராம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது புலியின் முன்கால்கள் மற்றும் மார்பு பகுதியில் காயம் இருந்தது தெரியவந்தது.

இறந்த புலி

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குநர் கணேஷ்ராம் கூறுகையில், “இறந்த ஆண் புலிக்கு 9 வயது இருக்கலாம். புலியின் உடலை கால்நடை மருத்துவக் குழுவினர், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பிரேதப் பரிசோதனை செய்தனர்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு, இந்தப் புலி, முள்ளம் பன்றியை வேட்டையாடும்போது அதன் முட்கள் புலியின் முன் கால்கள் மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் இரைப்பையிலும் முள்ளம் பன்றியின் முட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கால் மற்றும் இரைப்பையில் வீக்கம் ஏற்பட்டு சீழ் பிடித்துள்ளது. இதனால், வேட்டையாட முடியாமல் புலி இறந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.