சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியிருக்கிறது.
தோட்டக்கலை பராமரிப்பில் உள்ள அரசு பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் உள்ள படகு இல்லங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் புதுப்பொலிவுடன் பயணிகளை வரவேற்று வருகின்றன. இரண்டாம் சீனைக் கொண்டாடி மகிழ வடமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் நீலகிரிக்கு வருகைத் தந்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், தசரா மற்றும் விஜயதசமி பூஜைகளை முன்னிட்டு தமிழகம் , கர்நாடகா மாநிலங்களில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் விடுமுறையைக் கொண்டாடி மகிழக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கொடநாடு காட்சிமுனை , பைக்காரா அருவி உள்ளிட்ட பல இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பயணிகளின் வருகையால் ஊட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், ” ஆயுதபூஜை விடுமுறைக்கு குடும்பத்துடன் ஊட்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். அதன்படியே வந்தோம். நல்ல இதமான காலநிலை நிலவுகிறது. போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக இருக்கிறது” என்றனர்.