குஜராத் மாநிலம் மோர்பியில் வசிக்கும் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு, அவரின் பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கக் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அதில் அவர் பல சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஒன்று இன்ஸ்டாகிராம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு படேல் சோலங்கி என்ற இளைஞரிடமிருந்து நட்பு கோரிக்கை வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த இளைஞர், சிறுமியிடம் நட்பாகப் பழகி நடித்திருக்கிறார்.
மேலும், அவனுடைய நண்பன் கிஷன் படேலையும் அறிமுகப்படுத்தியிருக்கிறான். அதைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்களும் நட்பாகப் பழகி சிறுமியிடம் நடித்திருக்கிறார்கள். சுமார் 3 மாதங்கள் பழக்கத்துக்குப் பிறகு சிறுமியைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்காக மோர்பியில் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கு வரவழைத்தனர். கிஷன் படேல் மட்டும் வந்து, சிறுமியைச் சந்தித்திருக்கிறான்.
அங்குச் சிறுமியின் விருப்பமின்றி அவளுடன் செல்ஃபி எடுத்திருக்கிறான். அதைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட செல்ஃபிகளை சமூக வலைதளங்களில் பகிரப்போவதாக மிரட்டியிருக்கிறான். அதை தவிர்க நிர்வாணமாக வீடியோ கால் செய்யக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். அதையும் பதிவுசெய்துகொண்டு, மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் கேட்கும்போதெல்லாம், வீட்டிலிருந்து பணத்தைத் திருடி அவர்களிடம் கொடுத்து வந்திருக்கிறார் சிறுமி.
தங்கக் காதணிகள், ரூ.70,000 பணம் என மிரட்டிப் பறித்திருக்கிறார்கள். சில மாதங்களாகப் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்கும் மகளின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்திருக்கிறார்கள். அதன் பிறகே சிறுமி தனக்கு சில மாதங்களாகத் தொடரும் கொடுமைகளை விளக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, “குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மோர்பி நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள்மீது 384 (பணம் பறித்தல்), 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354 டி (பாலியல் மிரட்டல்), மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்த இருவரையும் கைதுசெய்தவுடன், அவர்களிடம் விசாரித்து அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்வோம். இருவராலும் அச்சுறுத்தப்பட்டு மிரட்டப்பட்ட இதுபோன்ற பெண்கள் இன்னும் அதிகமாக இருக்கிறார்களா என்பதை விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.