‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘தி வேக்சின் வார்’.
அனுபம் கெர், நானா படேகர், சப்தமி கவுடா, பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். கோவிட் தொற்று மற்றும் கோவிட் கால மருத்துவ ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள், கோவிட் போன்றவற்றைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்தைச் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மோடி பாராட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இப்படத்தைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘தி வேக்சின் வார்’ குறித்துப் பேசிய யோகி ஆதித்யநாத், “‘தி வேக்சின் வார்’ என்ற ஒரு புதிய படம் வெளியாகி இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் அறிவியல் சாதனைகளை எடுத்துரைக்கிறது.
அதுமட்டுமின்றி இந்தப் படம் இந்தியாவுக்கு எதிரான சதிகளை அம்பலப்படுத்தி, இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட அற்புதமான ஆராய்ச்சிகளை எடுத்துரைக்கிறது. சிலரது நோக்கங்களையும், நடவடிக்கைகளையும் உலக அரங்கில் அம்பலப்படுத்துவது அவசியம். இந்த விஷயத்தில் ’தி வேக்சின் வார்’ திரைப்படம் மிகச் சிறந்த முன்னெடுப்பு. கொரோனா போராட்டம் என்பது தனிநபர் போராட்டம் அல்ல.
பிரதமர் மோடி அதனை ஒரு கேப்டனைப் போல வழிநடத்தினார். பொய் பிரசாரத்தின் மூலம் சிலர் இந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்த முயன்றனர். நாட்டுக்கு எதிரான இது போன்ற சதிகளை ‘தி வேக்சின் வார்’ திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று பாராட்டிப் பேசியிருக்கிறார்.