வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வள்ளலார் சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார்.
அப்போது உரையாற்றிய மோடி, “கல்வியின் வலிமையை வள்ளலார் நம்பினார். ஒரு வழிகாட்டியாக அவரின் கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன. அதன் மூலம், எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டினார். சமூக சீர்திருத்தத்தில் வள்ளலார் முன்னோடியாக இருந்தார். கடவுளைப் பற்றிய அவருடைய பார்வை, சாதி, மதம், சமயம் ஆகியவற்றைக் கடந்தது. அவரின், படைப்புகளும் எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூடியவையே.
தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இளைஞர்கள் புலமையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி உள்கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கையைப் பெற்றிருக்கிறது. இளைஞர்கள், தங்களின் உள்ளூர் மொழிகளில் படிப்பதன் மூலம், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆக முடியும்.
வள்ளலார் இன்று உயிரோடு இருந்தால் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தைப் பாராட்டியிருப்பார் என நம்புகிறேன். எனவே, இந்தப் புனிதமான நேரத்தில், அவரின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான நம் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். நம்மைச் சுற்றியிருக்கும் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம்” என்று கூறினார்.