உத்தரபிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள், மாவட்ட மகளிர் மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் இல்லாததால் ஆண் மருத்துவரின் மருத்துவப் பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிலிபித் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜூன் 1 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலகட்டத்தில் ஐந்து சிறார்கள் உள்பட 79 பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு பெண் மருத்துவர் இல்லாத காரணத்தால் அதில் 70 பேர் தங்களுக்கான மருத்துவ பரிசோதனையை நிராகரித்துள்ளனர்.
அம்மாவட்ட மருத்துவமனையின் பெண் மருத்துவக் கண்காணிப்பாளரான டாக்டர் அனிதா சௌராசியா மார்ச் 1-ம் தேதியும், மற்றொரு மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் கமலா மிஸ்ரா மே 31-ம் தேதியும் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த நிலை உருவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஆண் மருத்துவர்கள் தான் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி மருத்துவ பரிசோதனையை நிராகரித்தவர்களிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டி கண்டுள்ளது. அப்போது பேசிய மைனர் ஒருவரின் தாய், “ என் 16 வயது சிறுமியை ஜூன் மாதம் எங்கள் வீட்டு வாசலில் இருந்து அடையாளம் தெரியாத ஒரு நபர் கடத்திச் சென்று பழத்தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், எங்கள் பெண் மயக்க நிலையில் இருந்தபோது அவரை மீட்டு நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சென்றதும் ஓர் ஆண் மருத்துவர்தான் என் மகளுக்குப் பரிசோதனை செய்து சிகிச்சையளிக்கப் போகிறார் என்பதை அறிந்ததும், எந்தச் சோதனையும் செய்யாமல் என் மகளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். எங்கள் மகள் ஏற்கெனவே ஓர் ஆண் மூலம் தான் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வேறோர் ஆண் மருத்துவரை பரிசோதனை செய்ய நாங்கள் எப்படி அனுமதிப்பது? இது அவள் மீதான மற்றொரு தாக்குதலுக்கு நிகரானது அல்லவா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை அறிக்கை இல்லாததால் நீதிமன்ற விசாரணையின் போது ஏற்படும் பாதகமான சட்ட விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் மருத்துவரால் பரிசோதனை மறுக்கப்படுவது சட்டத்தை மீறுவது மட்டுமல்ல, தப்பிப் பிழைத்தவர்களின் தனியுரிமைக்கான அரசியலமைப்பு உரிமையையும் மீறுவதாகும்” என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.