ஆந்திராவில், 33 வயது இளைஞனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இதயம் கொண்டுவருவதற்காக, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சரியான நேரத்தில், பசுமை வழித்தட போக்குவரத்து வசதியை அமைத்து, தன்னுடைய ஹெலிகாப்டரை வழங்கி உதவியிருக்கிறார். பசுமை வழித்தட போக்குவரத்து வசதி என்பது, மருத்துவ அவசர உதவிக்காக ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல, அந்தக் குறிப்பிட்ட வழித்தடத்தில் ஆம்புலன்ஸ் மட்டும் செல்வதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் போக்குவரத்து இடையூறுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் பிற வாகனங்களை மாற்று வழியில் அனுப்புதல் ஆகும்.
இந்த நிலையில், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான சீனிவாசன் என்பவர், அவசர இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக, திருப்பதியிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ பத்மாவதி பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மறுபுறம், குண்டூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயது மூளைச்சாவு நோயாளி கட்டா கிருஷ்ணாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
அதையடுத்து, குண்டூரிலிருந்து திருப்பதிக்கு உடனடியாக இதயம் கொண்டு செல்லப்பட முடிவுசெய்யப்பட்டது. அந்த நேரத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடியாக தனது அலுவல்ரீதியான ஹெலிகாப்டரை இதயத்தைக் கொண்டு சேர்ப்பதற்காக வழங்கி, உதவியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, குண்டூர் மருத்துவமனையிலிருந்து திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் இதயம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் திருப்பதி விமான நிலையத்திலிருந்து அலிபிரி பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு, பசுமை வழித்தடத்தின் மூலம் இதயம் விரைவாக கொண்டு சேர்க்கப்பட்டது.
அதையடுத்து, சீனிவாசனுக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சீனிவாசனுக்கு மறுவாழ்வு அளித்ததற்காக, ஜெகன் மோகன் ரெட்டிக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும் சீனிவாசனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.