இந்தியாவில் ஐபோன்களை விற்பனை செய்யும் ஆப்பிளின் பிரத்யேக ஷோரூம்கள் மும்பை மற்றும் டெல்லியில் இருக்கின்றன. மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ரிலையன்ஸ் மாலில் இந்த ஷோரூம் இருக்கிறது.
கடந்த 12-ம் தேதி ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோமேக்ஸ், ஐபோன் வாட்ச் 9, அல்ட்ரா வாட்ச் 2 எனப் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்தது ஆப்பிள். இந்தியாவில் அவை அனைத்தும் இன்றுதான் விற்பனைக்கு வந்த மும்பையில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் வாடிக்கையாளர்கள் இன்று அதிகாலையில் இருந்து வரிசையில் காத்திருந்து இந்த புதிய மாடல் ஐபோன்களை வாங்கிச்சென்றனர் மக்கள்.
அதிகாலை 3 மணியிலிருந்து ஐபோன் 15 வாங்க வரிசையில் முதலில் நின்று வாங்கியவர்களில் ஒருவர் கூறுகையில், “நான் அகமதாபாத்தில் இருந்து இங்கு வந்து காலை 3 மணியிலிருந்து வரிசையில் காத்திருந்தேன். 17 மணி நேர காத்திருப்புக்கு பிறகுதான் போன் வாங்க முடிந்தது” என்றார். இதே போன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்தும் ஐபோன் ரசிகர்கள் மும்பை ஷோரூமுக்கு இந்த ஐபோன்களை வாங்க வந்திருந்தனர்.
டெல்லி ஆப்பிள் ஷோரூமிலும் வாடிக்கையாளர்கள் காலையில் இருந்தே வரிசையில் காத்திருந்து ஐபோன்களை வாங்கிச்சென்றனர். அப்படி அதிகாலையிலிருந்தே வரிசையில் காத்திருந்த தீவிர ஐபோன் ரசிகர் ஒருவர், “என்னிடம் ஏற்கெனவே 13 ப்ரோமேக்ஸ், 14 ப்ரோமேக்ஸ் ஆகிய ஐபோன்கள் இருக்கின்றன. ஐபோன் 15 அறிவிக்கப்பட்டதிலிருந்து அதனை வாங்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன்” என்றார்.
ஐபோன் 14-லிருந்து கேமரா, பர்ஃபாமென்ஸ் என பல விதங்களில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது புதிய ஐபோன் 15 மாடல்கள்.
கருப்பு, மஞ்சள், ஊதா, பச்சை, பிங்க் ஆகிய நிறங்களில் இந்த புதிய ஐபோன்கள் கிடைக்கும். ஐபோன் 15 ரூ.79,900 என்ற விலையில் தொடங்குகிறது. ஐபோன் 15 பிளஸ் ரூ.89,900 என்றவிலையில் தொடங்குகிறது. ஐபோன் புரோ ரூ.1,34,900 என்ற விலையில் தொடங்குகிறது.