புதுக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரத்தினம். சர்வேயராக அரசுப் பணியில் சேர்ந்து, பிறகு ரியல் எஸ்டேட், மணல் வியாபாரம், வீடு விற்பனை, செங்கல் சூளை, கிரஷர் ஆலை, ஹோட்டல், கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 23 வகையான தொழில்களை நடத்தி, தொழிலதிபரானார். தற்போது திண்டுக்கல் ஜி.டி.என் நகரில் வசித்து வரும் ரத்தினம், திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் திண்டுக்கல் ஜி.டி.என் சாலையிலுள்ள ரத்தினத்தின் இரண்டு வீடுகள் மற்றும் அருகேயுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இன்று காலை 9 மணிக்கு திடீர் சோதனையைத் தொடங்கினர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் ரத்தினம் வீட்டைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதே வேளையில் மற்றொரு குழுவினர் ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீட்டில் சோதனை நடத்தினர். திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனி அருகேயுள்ள ஹனிபா நகரில் அவரின் வீடு அமைந்திருக்கிறது. அதனருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறையினர் 7 மணி நேரத்தைக் கடந்து (4 மணி நிலவரப்படி) சோதனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “கடந்த மாதம் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லில் இருக்கும் தி.மு.க வர்த்தக அணியின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் முக்கியப் புள்ளி வீட்டில் ரெய்டு நடக்கும் என எதிர்பாத்தோம். ஆனால் ரத்தினம் குறிவைக்கப்பட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
தமிழகம் முழுவதும் மணல் வியாபாரம் செய்யத் தொடங்கியதுதான், அவருடைய அபார வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இதையடுத்துதான் புதுக்கோட்டை ராமச்சந்திரனின் தொடர்பு மூலம் சேகர் ரெட்டியுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மிகக் குறைந்த காலத்தில் பல்வேறு இடங்களில் தொழில்களைத் தொடங்கினார்.
2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பின்போது சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்ததாகவும், பல கோடி ரூபாயை மாற்றியதாவும் கூறி, ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி,அவரைக் கைதுசெய்தனர்.
தமிழகத்தில் இருக்கக் கூடிய பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை இவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தற்போது தி.மு.க மேலிடத்தில் மிகவும் நெருக்கமாகியிருக்கும் ரத்தினம், திண்டுக்கல் எம்.பி சீட் வாங்கவும் காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில்தான், அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது” என்றனர்.