தேனி மாவட்டத்தில் `என்மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் தொடங்கி அல்லிநகரம், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக பங்களாமேடு வரை நடைபயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து பேசிய அண்ணாமலை, “திமுக ஆட்சியில் கஞ்சா விளைச்சல், விற்பனை அதிகரித்து விட்டது. திமுக-காரர்கள்தான் இதை செய்கிறார்கள். அதனால்தான் கஞ்சா புழக்கத்தை அவர்களால் அழி்க்க முடியவில்லை. குடிகாரர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கோ 10 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சி மருத்துவமனை சென்று படுத்துக் கொண்டவருக்கும் 10 லட்ச ருபாய் கொடுக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அவலம்.
இதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாது, திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்று பலரும் ஒற்றை எண்ணத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கஞ்சா, மது, சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதை விடுத்து சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார்கள்.
மோடி அமைச்சரவையில் உள்ள 79 அமைச்சர்களி்ல் 20 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 11 பெண்கள். சுமார் 25 சதவிகிதம் பட்டியல் இனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 3 பேர் மட்டும் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த கட்சி பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரி என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மாவட்டச் செயலாளர்களை கூட சாதி பார்த்து நியமிக்கிறீர்கள். கட்சிக்குள்ளே சாதி பாகுபாட்டை ஒழிக்க முடியவில்லை.
திமுக கட்சி தொடங்கி 70 ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் தமிழகத்தில் சாதி வன்மத்தை ஒழிக்க முடியவில்லை. திமுக சாதி அரசியல் செய்வதால் தான் இன்னமும் தமிழகத்தில் சாதிய வன்மம் இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் பொய்யை சொல்லி சொல்லி ஆட்சி நடத்துவார்கள்.
1974-ல் தமிழகத்தில் சட்டட்பேரவை முதல் பெண் தலித் அமைச்சர் சத்யவாணிமுத்து பட்டியல் இன மக்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று குறை கூறினார். கருணாநிதி உடனே அவரை டிஸ்மிஸ் செய்து கட்சியை விட்டு நீக்கினார். ஆ.ராசாவை ஏன் பொதுத் தொகுதியில் நிற்க வைக்காமல் தனித்தொகுதியான பெரம்பலூர், நீலகிரியில் நிற்க வைக்கிறார்கள். பொதுத்தொகுதியில் நிற்க வைத்து ஜெயிக்க வையுங்கள். பெரும்பான்மையான சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தான் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கிறார்கள். அப்புறம் எப்படி சாதி ஒழியும். திமுக சாதி அரசியலை தூண்டி விடுகிறது
திமுக ஆட்சியில் 23 தனியார் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதில் 11 கல்லூரி திமுக-வினருடையது. இதனால் தான் திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது. மோடி ஆட்சிக்கு வந்தால் தேசம் வளரும், கடைக்கோடி விவசாயிக்கும், பாமரனுக்கும் வீடு, கழிப்பறை, காப்பீடு, விவசாய உதவித் தொகை என்று ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் உயரும்.
ஆனால் திமுக ஆட்சியில் அவர்கள் குடும்பம் மட்டுமே உயரும், வளரும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் குடும்பத்தினரே பொருளாதார வளர்ச்சியில் உள்ளனர். ஆகவே திமுக ஆட்சியில் யாருக்கும் எந்த பலனும் கிடைப்பதில்லை. உலக நாடுகளிடம் கையேந்திய நிலை வெகுவாய் மாறி தற்போது அவர்களுக்கு மருத்துவம், உணவு, பண உதவி என்று கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு மோடி ஆட்சியில் தேசம் உயர்ந்துள்ளது” என்றார்.