குஜராத்தின் வதோதரா பகுதியில் ஒரு பெண் குடிபோதையில், பெண் காவலரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில், இதில் சம்பந்தப்பட்ட பெண் மது அருந்திவிட்டு கார் ஓட்டி வந்ததாக போலீஸார் காரோடு அவரை மடக்கியிருக்கின்றனர்.
பின்னர் பெண் காவலர்கள் சிலர், அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தபோது, பெண் காவலர் ஒருவரை அந்தப் பெண் கன்னத்தில் அறையவே, சக அதிகாரிகள் அந்தப் பெண்ணை பதிலுக்கு அடித்து வாகனத்தில் ஏற்றினர்.
இது தொடர்பாக சமுக வலைதளத்தில் வெளியான வீடியோவில், குற்றம்சாட்டப்படும் பெண் காரிலிருந்து போலீஸாரால் இறக்கப்பட்டார். அதையடுத்து பெண் காவலர்கள் அவரை போலீஸ் வாகனத்தை நோக்கி அழைத்துச்செல்கையில், பெண் காவலர்களை அவர் ஏதோ வசைபாடிக்கொண்டே சென்றார். அப்போது பெண் காவலர் ஒருவர் அந்தப் பெண்ணை தலையில் தட்டி ஜீப்புக்குள் தள்ளும்போது, அந்தப் பெண் திடீரென வேறொரு பெண் காவலரின் கன்னத்தில் அறைந்தார்.
பின்னர் அந்த இடத்தில் கொஞ்ச நேரம் சலசலப்பு ஏற்படவே, போலீஸ் அதிகாரிகள் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்றனர். மேலும், அந்தப் பெண் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது என போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
பல ஆண்டுகளாகக் குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கின்றபோதும், சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுகிறது என்பதை இதுபோன்ற சம்பவம் அவ்வப்போது உறுதிசெய்கிறது.