அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு மேற்கொண்டதில்லை. தற்போது இந்தியா நிலவுக்குச் செலுத்தியிருக்கும் `சந்திரயான்-3′, நிலவின் தென் துருவத்தில் ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டிருக்கிறது என்பதால், உலகளவில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்வதற்காக `சந்திரயான்-3′ கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
கடந்த 17-ம் தேதி நிலவின் தரையிலிருந்து 153 கி.மீ உயரத்தில் சுற்றி வந்தது. இஸ்ரோவின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் முழுமையாக வெற்றிபெற்றால், இது இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படும்.
இந்த நிலையில், பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருவர் டீ ஆற்றுவது போன்ற ஒரு படத்தைப் பதிவிட்டு, ”சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவிலிருந்து எடுத்த முதல் படம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து சமூக வலைதளவாசிகள் பலரும், இந்தப் பதிவுக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். உடனே இந்த எதிர்ப்புக்குப் பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ், “வெறுப்போடு இருப்பவர்களுக்கு வெறுப்பு மட்டுமே தெரியும். `ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றபோது, எங்கள் கேரள பகுதி சேட்டா, நிலவில் டீக்கடை வைத்திருந்தார்’ என்ற அந்த நகைச்சுவையைத்தான் இங்குப் பகிர்ந்திருந்தேன். அந்த நகைச்சுவை சித்திரிப்பை நீங்களும் பார்த்திருக்கக்கூடும்… உங்களுக்கு இதில் நகைச்சுவை இல்லையென்றால், அது உங்கள்பாடு…” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜின், புகைப்படக் கருத்துக்கு எதிராக இந்து அமைப்புகளின் தலைவர்கள் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது பாகல்கோட் மாவட்டத்தின் பனஹட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கர்நாடக காவல்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs