டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, “2019-ல், செயல்திறன் அடிப்படையில், நீங்கள் என்னை மீண்டும் ஆசீர்வதித்தீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் முன்னோடியில்லாத வளர்ச்சிக்கானது. 2047-ன் கனவை நனவாக்கும் மிகப் பெரிய பொன்னான தருணம் வரும் ஐந்தாண்டுகள். அடுத்த முறை ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன்வைப்பேன்” எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் பேச்சு சமூகவலைதளங்களில் கலவையான விமர்சனங்களைக் கொண்டுவந்தது. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஒவ்வொரு கட்சியினரும் வெற்றி பெற்ற பிறகு, மீண்டும் மீண்டும் வெற்றிபெறுவோம் என்று கூறுவார்கள். ஆனால் வெற்றி மக்கள் கையில், வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது. ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தன்னாட்சி அமைப்புகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க புதிய கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் ஆணையமும் பலவீனமடைந்து வருகின்றன. ‘நான் மீண்டும் 2024-ல் கொடியேற்றுவேன்’ என்பது ஆணவம். அடுத்த ஆண்டு மீண்டும் மோடி தேசியக்கொடியை அவரது வீட்டில் ஏற்றுவார்”எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நமது விகடன் தனது வலைதளப்பக்கத்தில்,”அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவிலும் செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றுவேன் என்று பிரதமர் மோடியின் நம்பிக்கை…” குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதற்குப் பதிலாக “நடக்கும்” – “பொய்க்கும்” – “கருத்து இல்லை” என்ற மூன்று விருப்பத்தேர்வுகளையும் கொடுத்திருந்தோம்.
இந்தக் கருத்துக்கணிப்பில் பல்வேறு தரப்பு மக்கள் பங்குகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்கள் அதில், “அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவிலும் செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றுவேன் என்று பிரதமர் மோடியின் நம்பிக்கை…” நடக்கும் என 38 சதவிகித மக்களும், பொய்க்கும் என 53 சதவிகித மக்களும், கருத்து இல்லை என 9 சதவிகித மக்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.