`உதவும் கரங்கள் 2003′ குழு பல நற்செயல்களை அவ்வப்போது செய்து வருகிறது. தற்போது அவர்கள் திண்டுக்கல் மாவட்ட தாடிகொம்பு பகுதியில் பணிபுரிந்த மறைந்த காவலர் முருகன் குடும்பத்திற்கு உதவியிருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு பகுதியின் காவல் நிலையத்தில் பணிபுரிந்து கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதியன்று இயற்கை எய்தினார் முருகன். ‘உதவும் கரங்கள் 2003’ அமைப்பின் மூலம் முருகன் குடும்பத்திற்கு ரூ.28,94,000 மதிப்பிலான காப்பீடு பத்திரமும் வங்கி டெப்பாசிட்டும் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி முருகன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக உதவும் கரங்கள் குழுவிலிருக்கும் முரளியிடம் பேசினோம்.
அவர், “உதவும் கரங்கள் குழுவிலிருந்து 5788 நபர்கள் முருகன் குடும்பத்திற்கு உதவியுள்ளனர். நபர் ஒன்றுக்கு 500 வீதம் மொத்தமாக ரூ.28,94,000 கிடைத்தது. அதைப் பணமாக வழங்கிவிடலாம் என முதலில் முடிவு செய்தோம். அதன் பின்பு முருகன் நினைவாக அவர் குடும்பத்திற்கு இனிவரும் காலகட்டங்களில் உதவும் என முடிவு செய்து முருகனின் மனைவி, மகன் ஆகியோர் எல்.ஐ.சி கணக்கில் 28 லட்சம் டெப்பாசிட் செய்துள்ளோம். முருகனின் மகள் வங்கிக் கணக்கில் மீதமுள்ள 94000 ரூபாயுடன் எல்.ஐ.சி தரகு தொகை 40,000 ரூபாயைச் சேர்த்து 1,34,000 ரூபாயைச் செலுத்தியுள்ளோம்.
2003-ம் ஆண்டு பேட்ச் காவலர்களை அனைத்து மாவட்டங்களிலிருந்தும் டெலிகிராம் குழுவில் இணைத்தோம். பலர் சேர்ந்து உதவி செய்தால் பின்வரும் நாள்களில் காவலர்களின் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்குமென முடிவு செய்தோம். இப்போது ‘உதவும் கரங்கள் 2003’ குழுவிலிருந்து 5788 நபர்கள் உதவியுள்ளனர். இது எங்கள் குழுவின் 49வது பங்களிப்பு!” எனக் கூறினார்.