உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், 7-ம் தேதி வரை, தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதற்கும், சிசுக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும் `தாய்ப்பால் ஊட்டல் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு 202-3ம் ஆண்டின் தாய்ப்பால் ஊட்டல் வாரத்தின் முக்கிய அம்சமாக, `தாய்ப்பால் ஊட்டலை செயல்படுத்துதல் – பணியில் இருக்கும் பெற்றோர் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்’ என்ற செயல்திட்ட நோக்கம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்ப்பால் ஊட்டாததன் காரணம்
உரிய காலத்திற்கு முன்பே தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலை நிறுத்துவதற்கு, அல்லது தாய்ப்பாலே ஊட்டாது விடுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, பணியிடங்களில் சந்திக்கும் சவால்களே. போதுமான நேரமும், உரிய உதவியும் கிடைத்தால் தற்கால அம்மாக்களுக்கு தாய்ப்பால் ஊட்டல் பூரண சாத்தியமாகும்.
இந்தியாவில் இது தொடர்பாக விரிவான விழிப்புணர்வையும், உடல்நலம் மற்றும் மகப்பேறு சார்ந்த மருத்துவ வசதிகள் குறித்த விழிப்பையும் ஏற்படுத்த, தாய்ப்பால் ஊட்டல் வாரம் தொடந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வேலை பார்க்கும் தாய்மார்களுக்கென உருவாக்கப்பட்ட செயல்திட்டங்களை திறம்பட செயலாற்றவும், இவ்வாரம் அறிவுறுத்துகிறது.
இந்தியாவில் 55% சிசுக்களுக்கே தாய்ப்பால்!
அமெரிக்கா, எதியோப்பியா, பூடான், மடகாஸ்கார், பெரு, இந்தியா உட்பட 120 நாடுகளில், உலக தாய்ப்பால் ஊட்டல் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில் குரோஷியா (Croatia) தாய்ப்பால் ஊட்டலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் தற்போது 55% சிசுக்களுக்கு மட்டுமே தாய்ப்பால் ஊட்டப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், MOHFW உள்ளிட்டவை பின்வருவனவற்றை அறிவுறுத்துகின்றன.
• குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அளித்தலை உறுதிப்படுத்துதல்.
• குழந்தை பிறந்து ஆறு மாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே அளித்தல்.
• இரண்டு வயது வரை அல்லது கட்டாய ஆறு மாதங்களுக்குப் பிறகும் தேவைக்கேற்ப தொடர்தல்.
இவையே தாய்ப்பால் ஊட்டல் வாரத்தின் குறிக்கோள்களாகவும் உள்ளன. உகந்த அளவிற்கான பாலூட்டல் என்பது ஆரோக்கியக் குறைபாடு, அதிக உடல் பருமன், உணவு சார்ந்த மற்றும் தொற்றக்கூடிய நோய்களில் இருந்து தாயையும் சேயையும் காக்கும். அதுமட்டுமன்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள Meta ஆய்வின்படி, தாய்ப்பாலூட்டுவது குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பால் புகட்டலின் அவசியம்!
முதல் ஆறு மாதத்திற்கான தாய்ப்பால் ஊட்டலை குறைந்தது 50 சதவிகிதத்திற்கேனும் அதிகப்படுத்துதலே இதன் குறிக்கோளாகும். இன்றைய சூழலில் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன. இவற்றிலிருந்து தாயையும் சேயையும் காப்பதில் தாய்ப்பால் புகட்டுதல் தவிர்க்க முடியாத பெரும்பங்கு ஆற்றுகிறது. ஆகவே இதனை செயல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருப்பினும், இதன் தேவை இன்றியமையாத ஒன்றாகும். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு சிசுவிற்கு 478- 1356 மில்லி தாய்ப்பால் அளிப்பது உகந்தது.
குழந்தையின் நிலையான வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பாலூட்டுதல் பேருதவியாக இருக்கும். பெரும்பாலும் ஊட்டச்சத்துக் குறைபாடால் இறக்கும் 45 சதவிகிதக் குழந்தைகளின் எண்ணிக்கையை தாய்ப்பால் ஊட்டலின் மூலம் குறைக்க முடியும்.
– ம. மதுமிதா