ஆனந்த விகடன் மற்றும் King maker IAS அகாடமி இணைந்து நடத்தும் இலவச பயிற்சி முகாம் மற்றும் ஓராண்டு இலவச பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு வருகிற ஜுலை 30 ஆம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடக்கவிருக்கிறது.
காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமிற்கு அனுமதி இலவசம். இந்த இலவசப் பயிற்சி முகாமில் உரையாற்றுவதற்கு திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் மு.பிரதீப் குமார் (IAS), திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா (IPS), வருமான வரித்துறை கமிஷ்னர் நந்தகுமார் (IRS) மற்றும் ஊக்க உரையளிக்க King maker IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறை கமிஷ்னர் நந்தகுமார் (IRS),”UPSC தொடர்பாக மாணவர்களுக்கு அதிகபடியான சந்தேகங்கள் இருக்கின்றன. ‘UPSC தேர்வுகளை எதிர்கொள்வதற்கு நமது பொருளாதார சூழ்நிலைகள் ஒத்துழைக்குமா, நாம் பெரிய கல்லூரிகளில் படிக்கவில்லையே இது சரியாக இருக்குமா?’ எனப் பல சந்தேகங்கள் பலருக்கு எழுகின்றன.
குறிப்பாக ‘நாம் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்கிறோமே நமக்கு இது எட்டாக்கனியா?’ எனப் பலருக்கு ஐயமிருக்கிறது. இது போன்ற தவறான புரிதல் நிலவுவதால்தான் போட்டித் தேர்வுகள் பக்கம் பலர் நகர்வதில்லை. முதலில் UPSC தேர்வுகளில் கலந்துகொள்வதற்கு என்னென்ன கல்வித் தகுதிகள் தேவைப்படும் எனப் பலர் குழப்பமடைகின்றனர்.
இதற்கு பொறியியல் பட்டப்படிப்புகள் தான் முக்கியமாக தேவைப்படும் எனப் பலர் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 50 சதவிகிதம் பேர் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் போன்ற பட்டப்படிப்பை முடித்தவர்கள் தான். இதுபோன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலிருந்து ஏதேனும் ஒரு கல்வித் தகுதி போதுமானது.
கல்லூரிப் படிப்பைத் தொடங்கும் முன்பே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர்கள் பி.ஏ வரலாறு, அரசறிவியல், புவியியல், சமூகவியல் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுத்து படிக்கும்போது மாணவர்களுக்கு இந்தத் தேர்வை எதிர்கொள்வதற்கு பொது அறிவும் பாடத்திட்டங்கள் தொடர்பான தெளிவுகளும் கிடைக்ககூடும். பலருக்கு நாம் பயிற்சி மையங்களுக்கு கட்டாயமாக சென்று பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமா என சந்தேகச் சூழல் நிலவுகிறது. ஒரு கேள்வியை ஏன், எதற்கு, எப்படி கேட்கிறார்கள் என்பதை அறிந்தவர்களுக்கு பயிற்சி மையங்கள் அவசியமில்லை. அதைத் தாண்டி மற்றவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப பயிற்சி மையங்களை அணுகலாம்.” என்றார்
முன்பதிவிற்கான லிங்க் கீழே