அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வியூகம் அமைக்கும் விதமாக எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், காங்கிரஸ் தலைமையில் நேற்று முன்தினமும், நேற்றும் பெங்களூருவில் நடைபெற்றது. பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றிருந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன.

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம்

இருப்பினும் முதல் கூட்டத்தில் புறக்கணிப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இரண்டாவது கூட்டத்திலும் புறக்கணிப்பட்டார். மேலும் முதல் கூட்டம் நடந்தபோதே, `தனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை’ என மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார். இவ்வாறிருக்க தற்போது இரண்டாவது கூட்டத்திலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில், `சாதிய எண்ணம்கொண்ட கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கிறது’ என்று மாயாவதி சாடியிருக்கிறார்.

இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “2024 லோக் சபா தேர்தலிலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வேண்டுமானால் அந்தந்த பிராந்திய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம். அதுவும் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனோ, காங்கிரஸ் கூட்டணியுடனோ இல்லையென்றால் மட்டுமே. ஆட்சிக்கு வருவதற்காக தங்களைப்போல் ஒத்த எண்ணம் கொண்ட சாதிய, முதலாளித்துவ கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கிறது.

மாயாவதி

பா.ஜ.க-வும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துகிறது. ஆனால், அவர்களின் கொள்கைகள் பட்டியலினத்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரானது. காங்கிரஸ் தன்னுடைய சாதிய, முதலாளித்துவ மனப்பான்மையை ஒதுக்கிவைத்துவிட்டு, அம்பேத்கரின் கருத்துகளைக் கேட்டு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் பாடுபட்டிருந்தால், பகுஜன் சமாஜ் உருவாக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினர்கள், ஏழைகள், முஸ்லிம்கள் விவகாரத்தில் பா.ஜ.க-வும், காங்கிரஸும் ஒரேமாதிரியானவைதான். பா.ஜ.க-வும், காங்கிரஸும் அவர்களுக்கு எதுவும் செய்யாததால்தான் அந்த இரு கூட்டணிகளிடமிருந்து பகுஜன் சமாஜ் விலகியிருக்கிறது” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.