அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் ஆகியவற்றை, நேரடியாகப் பாடாமால், ஒலிபரப்பும் போக்கு அதிகரித்து வந்த நிலையில், இவற்றை ஒலிபரப்பாமல் அனைவரும் பாட வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதனடிப்படையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் ஆகியவை மைக்கில் பாடப்பட்டு வருகின்றன. நீலகிரியில் நடைபெறும் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியகீதத்தைப் பாடுவதற்காக அருகிலுள்ள பள்ளிகளிலிருந்து மாணவிகள் சிலர் அழைத்துவரப்படுகின்றனர்.
பள்ளி வேலை நாள்களில் அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பே மாணவிகளை அழைத்து வந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மைக்கில் பாடவைக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி முடியும்வரை அவர்களை அங்கேயே காத்திருக்கவைத்து, தேசியகீதத்தையும் பாடவைத்துவிட்டு, அனுப்பிவைக்கின்றனர். மாவட்டம் முழுவதுமே இதே நிலைதான் நீடிக்கிறது. இதன் காரணமாக மாணவிகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் குன்னூர் மனோகரன், “அரசு அதிகாரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் பாடத் தெரியாதா… இதைக்கூட பாடத் தெரியாதவர்கள் அரசுப் பணிக்கு எப்படி வந்தார்கள்… அமைச்சர் உள்ள மாவட்டம் என்பதால், அடிக்கடி அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு முறையும் அருகிலுள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து மட்டுமே மாணவிகளை அழைத்து பல மணி நேரம் காத்திருக்க வைக்கிறார்கள். இதனால், அன்றைய தினம் பல வகுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவிகளை அழைத்து வந்து காத்திருக்கவைக்கிறார்கள். இது அவர்களுக்கு கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தும். அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகளும், பணியாளர்களும் பாடினால் என்ன?” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதாவை ஊட்டி நகராட்சிப் பள்ளியில் சந்தித்துப் பேசினோம், “நான் இப்போதுதான் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்த நடைமுறையில் மாணவிகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வுசெய்து, அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்” என உத்தரவாதம் அளித்தார்.