அபூர்வமாக எங்கோ சில ஆண்களுக்கு மட்டுமே வரும் விந்து வராத பிரச்னையான Anejaculation பற்றி, இந்த வார காமத்துக்கு மரியாதையில் பேசுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
“Anejaculation…விந்து வராத இந்தப் பிரச்னை கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் ஆண்களுக்கு இருக்கிறது. இவர்களை, வாழ்நாள் முழுவதும் விந்து வெளியேற்ற முடியாதவர்கள்… ஆரம்பத்தில் விந்து வெளியேறிக்கொண்டிருந்தவர்கள்; குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு விந்து வெளியேற்ற முடியாதவர்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு விந்து வெளியேறவில்லை என கஷ்டப்படுபவர்கள், திருமணத்துக்கு முன்பு சுய இன்பம் செய்திருப்பார்கள்… ஆனால், திருமணமான பிறகு உறவுகொள்ள முடியாமல் தவிப்பார்கள். சிலர், திருமணமாகி சில காலம் தாம்பத்திய உறவும் கொண்டிருப்பார்கள். பிறகு விந்து வெளியேறாமல் தவிப்பார்கள். இதனால், விறைப்புத்தன்மை, விந்து வெளியேற்றுவது என எல்லாவற்றிலும் குழப்பமாகி விடும் இவர்களுக்கு. இவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
விந்தணுக்களை பரிசோதனை செய்ய… விந்தணுக்களை உறைய வைக்க… செயற்கை கருத்தரிப்பு செய்ய… என விந்து எடுத்துத்தர வேண்டிய கட்டாயம் வருகையில் இவர்களால் முடியாது.
சரி, இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால், கடுமையான மனஅழுத்தம் முதல் காரணம்.
அடுத்து மனநோய் இருந்தாலும், மனநோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் இந்தப் பிரச்னை வரலாம். ரத்த அழுத்தத்துக்கு சாப்பிடக்கூடிய மருந்துகள், அரிப்புக்கு சாப்பிடக்கூடிய மருந்துகளும்கூட விந்து வெளியேறுவதைத் தடுக்கும்.
இனி தீர்வுகள்… பாதிக்கப்பட்டவர்களுக்கு செக்ஸ் தெரபி சொல்லித் தருவோம். இதை கணவனும் மனைவியும் அவர்களுடைய படுக்கையறையில் செய்ய வேண்டும். இதிலேயே சிலருக்கு பலன் கிடைத்து விடும். ஒருவேளை இதில் விந்து வெளியேறவில்லை என்றால், சில மாத்திரைகள் மூலம் பிரச்னையைச் சரி செய்யலாம். இதிலும் குணமாகவில்லை என்றால், மனைவியுடன் போர்ன் மூவிஸ் பார்த்துக்கொண்டே உறவுக்கு முயற்சி செய்யலாம். ஜாகிங்போல குதித்துவிட்டு, மார்பு படபடப்பாக இருக்கும்போது உறவு வைத்துக்கொண்டால் சிலருக்கு விந்து வெளியேறலாம். இதிலும் சரியாகவில்லையென்றால், வைப்ரேட்டர்ஸ் மூலம் உச்சக்கட்டத்துக்கு கொண்டுவந்து விந்து வெளியேற வைக்கலாம். இதிலும் சரியாகவில்லையென்றால், எலெக்ட்ரோ எஜாக்குலேஷன் மூலம் வெளியேற்ற வைக்கலாம். கணவர் கோமா நிலையிலிருந்தால், இந்த முறை மூலம் கணவரின் விந்துவைச் சேகரித்து மனைவியைக் கருவுற வைக்கலாம்.
விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவது எப்படி ஒரு பிரச்னையோ, அதேபோல வராததும் பிரச்னையே… ஆனால், அதற்கு தீர்வுகள் இருக்கின்றன” என்கிறார் டாக்டர் காமராஜ்.