பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து விதிகளை மீறியதாக 17 வயது சிறுவன் போக்குவரத்துக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை பிரான்ஸ் நாட்டில் பெரும் வன்முறைக்கு வித்திட்டிருக்கிறது. சிறுவனின் கொலையைக் கண்டித்து கடந்த 5 தினங்களாக பிரான்ஸில் போராட்டம் நடந்து வருகிறது. பல இடங்களில் வன்முறையும் வெடித்து வருகிறது. பிரான்ஸின் அதிபர் அமைதிக்காக்குமாறு போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை விடுத்தும், பல இடங்களில் நிலை மோசமடைந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியின் ஹே லெஸ் ரோஸஸ் டவுன் மேயர் வின்சென்ட் ஜேன்ப்ரன் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்தனர். அவர் வீட்டின்மீது சிலர் காரை மோதி சேதத்தை ஏற்படுத்தினர். இதில் மேயரின் மனைவியும் அவர்களது குழந்தைகளில் ஒருவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திகிலும், அவமானமும் நிறைந்ததாக நேற்றிரவு அமைந்துவிட்டது. என் வீட்டின்மீது நடந்த தாக்குதலில் என் மனைவியும், என் குழந்தைகளில் ஒருவரும் காயமடைந்தனர். இது உச்சபட்ச முட்டாள்தனம் மட்டுமல்லாமல் கொலை முயற்சியும்கூட” என்று பதிவிட்டிருக்கிறார். இந்த தாக்குதல் தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.