கடந்த அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பண மோசடி தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.
அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணாமாக உடனடியாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கிருந்து அவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விகடன் இணையதளத்தில் ,”அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது ‘சரி’ – ‘தவறு’ – ‘கருத்து இல்லை'” என முன்று விருப்பத்தேர்வுகளை கொடுத்து கருத்துக் கணிப்பு நடத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் வாக்களித்திருக்கின்றனர்.
இதன் முடிவில்,”அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது தவறு என 53 சதவிகித மக்களும். சரி என 42 சதவிகித மக்களும். கருத்து இல்லை என 5 சதவிகித மக்களும் வாக்களித்திருக்கின்றனர்.