“சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணையில் யாரும் குறுக்கீடு செய்ய முடியாது” என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் காரைக்குடியில் செந்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இரண்டு நாள்கள் பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்திருக்கும் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், இன்று காலை சாக்கோட்டை மித்திரங்குடியில் 6.6 கி.மீ தூரத்துக்கு மத்திய அரசு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் செயல்படுத்தப்படும் சாலை பணிகளைப் பார்வையிட்டார்.
பின்னர் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சிங், “68 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாத சாதனைகளை, 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்திருக்கிறார்.
சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு இந்தியா முழுவதும் பயணப்பட அதிகாரமும், சட்டமும் இருக்கிறது. அவர்களது விசாரணையில் யாரும் குறுக்கீடு செய்ய முடியாது.
தமிழ்நாடு அரசு இயற்றியிருக்கும் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது.
மணிப்பூர் விவகாரத்தில் மோடி தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அவசியம் ஏற்பட்டால் அவர் தலையிடுவார்” என்றார்.