தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் மகள் அர்ச்சணா. இவர், போட்டித் தேர்வு மையத்தில் பயிற்சி பெறுவதற்காக தினமும் கழுகுமலையிலிருந்து கோவில்பட்டிக்குப் பேருந்தில் வந்து செல்கிறார். செண்பகவல்லி அம்மன் கோயில் அருகிலுள்ள ஒரு தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் போட்டித் தேர்வு மையத்தில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு, கழுகுமலைக்குச் செல்வதற்காக பயிற்சி மையத்திலிருந்து கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் எதிரே வந்த 2 இளம்சிறார்கள், அர்ச்சணாவின் கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். நகையைப் பறிகொடுத்த அர்ச்சணா அவர்களைப் பார்த்து ’திருடன்… திருடன்’ என அழுதுகொண்டே கத்தியிருக்கிறார். அருகில் இருந்தவர்களும் 2 இளம்சிறார்களை விரட்டிப்பிடிக்க முயன்றும், அவர்களைப் பிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து தன்னுடன் பயிற்சி வகுப்பில் பயிலும் சக தோழி ஒருவருடன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததைக் கூறி புகார் அளித்திருக்கிறார். சம்பவம் நடந்த செண்பகவல்லி அம்மன் கோயில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். இதில், அவர்கள் இருவரும் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. போலீஸார், அவர்கள் இருவரையும் கைதுசெய்து பறிக்கப்பட்ட தங்கச்சங்கிலியை மீட்டனர். பின்னர், இருவரையும் தூத்துக்குடி இளம்சிறார்கள் கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், “பெரிய ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, ஏதாவது ஒரு படம் பார்க்கணும்னு நினைச்சோம். ஆனா, கையில காசு இல்ல. செலவுக்காக அந்த அக்கா கழுத்துல கிடந்த செயினைப் பறிச்சோம். அடகு கடையில அடகு வைக்க போனப்போ மாட்டிக்கிட்டோம்” எனச் சொல்லி போலீஸாரையே அதிரவைத்திருக்கின்றனர். கோவில்பட்டி நகரில் கடந்த ஒரு மாதமாக செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலீஸார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.