தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), பாடப்புத்தகங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது. வாக்கியங்களை மாற்றுதல், சில பிரிவுகளை நீக்குதல் போன்றவற்றை மேற்கொள்கிறது.
அதுமட்டுமல்லாது பரிணாமக் கோட்பாடு, பனிப்போர், தொழில்புரட்சி, இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயப் பங்களிப்பு போன்ற பல பிரிவுகள், பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் பாடநூல் மேம்பாட்டுக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள 33 கல்வியாளர்கள், பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கக்கோரி, NCERT-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
NCERT இயக்குநர் தினேஷ் சக்லானிக்கு, அவர்கள் அனைவரும் இணைந்து எழுதியுள்ள கடிதத்தில், “மூலப் புத்தகத்தில் இருந்து தற்போது உள்ள புத்தகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்கள், அப்புத்தகங்களை வேறு ஒன்றாகக் காட்டுகின்றன. இதனால் அவை நாங்கள் உருவாக்கிய புத்தகம் என்று கூறி அவற்றை எங்கள் பெயருடன் இணைப்பது கடினம் என நாங்கள் உணர்கிறோம். இதனால் எங்கள் ஆக்கபூர்வமான கூட்டு முயற்சி ஆபத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
அந்தப் பாட புத்தகங்கள் பல்வேறு பின்புலம் மற்றும் கருத்தியல்களில், அரசியல் செயற்பாட்டாளர்களின் விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டவை. அவை இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியலமைப்பு உருவாக்கம், ஜனநாயக செயல்பாடு மற்றும் இந்திய அரசியலின் முக்கிய அம்சங்களுடன் சர்வதேச வளர்ச்சி மற்றும் அரசியல் அறிவியல் பற்றிய கோட்பாடு அறிவினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் மாலினி கோஸ், பிரதாப் பானு மேத்தா, நிவேதிதா மேனன், சைத்ரா ரெட்கர், ராஜேஷ் தேவ், பீட்டர் ரொனால்ட் டிசோசா, ராஜீவ் பார்கவா மற்றும் முசாபர் அசாதி ஆகியோர் அடங்குவர்.