சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்ந்து வந்த ஜின்னியா (zinnia) செடியில் பூ பூத்துள்ளது. இப்பூவின் புகைப்படத்தை நாசா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், “நாசா விஞ்ஞானிகள் 1970 -களில் இருந்தே விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களில் மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும்.
இதற்காக விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஆதலால், இந்த குறிப்பிட்ட பரிசோதனையானது 2015-ல் நாசாவின் விண்வெளி வீரர் `ஜெல் லிண்ட்கிரென்’ என்பவரால் தொடங்கப்பட்டது.
நாசா விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மிளகு போன்றவற்றையும் பயிரிட்டுள்ளனர். இந்த ஜின்னியா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள காய்கறி வளர்க்கும் இடத்தின் ஒரு பகுதியாகச் சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது.
இந்த விண்வெளித் தோட்டம் வெறும் காட்சிக்காக மட்டும் அல்ல, சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதையும், பூமியிலிருந்து கொண்டு வரும் பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது. தற்போது ஜின்னியா மலர் வெளிர் – ஆரஞ்சு நிற இதழ்களோடு முழுமையாக மலர்ந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளனர்.
“மைக்ரோ கிராவிட்டியில் (Micro Gravity) அதாவது குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை நன்கு புரிந்துகொள்வதற்கும், விண்வெளி வீரர்கள் ஆழமான விண்வெளிப் பணியில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பயிற்சி செய்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது” என நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக ஒரு பூ மலர்ந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.