கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதையடுத்து, ட்விட்டரின் முன்னாள் CEO-வாக இருந்த ஜாக் டோர்சி ட்விட்டருக்குப் போட்டியாக ‘Bluesky’ என்ற செயலியை அறிமுகப்படுத்தி அதை மேம்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட் ஜாக் டோர்சியிடம், “ட்விட்டரில் CEO-வாக பொறுப்பு வகித்திருந்த சமயத்தில் அரசியல் ரீதியாகவும், வெளிநாட்டு அரசு ரீதியாகவும் ஏதேனும் நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் சந்தித்துள்ளீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜாக் டோர்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது தொடர்பாக பதிவுகளைப் பதிவிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மோடி அரசு அழுத்தம் கொடுத்ததாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “நான் ட்விட்டர் CEO-வாக பொறுப்புவகித்திருந்த சமயத்தில் பல வெளிநாட்டு அரசுகள் நிறைய நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்திருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று பல்வேறு வகையில் கோரிக்கைகளும், அழுத்தங்களும் வந்தன. அது ‘இந்தியாவில் ட்விட்டரை மூடுவோம்’, ‘உங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை (ரைடு) நடத்துவோம்’, ‘நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்றால் உங்கள் அலுவலகங்களை மூடுவோம்’ என்றெல்லாம் நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். இதுதான் இந்தியாவா! இதுதான் ஜனநாயகமா!” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.