இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரைக் கைதுசெய்யுமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திவந்த நிலையில், 15-ம் தேதிக்குள் டெல்லி போலீஸ் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும், அத்துறை வீரர், வீராங்கனை காத்திருக்குமாறு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியிருந்தார். இதன் காரணமாக ஜூன் 15 வரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர்.
இப்படியிருக்க, நேற்று மதியம் டெல்லி போலீஸ், மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகட்டை விசாரணைக்காக பிரிஜ் பூஷணின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு அழைத்துச்சென்றனர். இதையறிந்த வினேஷ் போகட், “பிரிஜ் பூஷண் தன்னுடைய அரசியல் பலத்தால் மல்யுத்த வீராங்கனைகளை துன்புறுத்துவதில் பிஸியாக இருக்கிறார். போலீஸார் எங்களை பிரிப்பதற்குப் பதில் அவரைக் கைதுசெய்தால் நீதி கிடைக்கும்” என்று ட்வீட் செய்தார்.
இதற்கிடையில், சர்வதேச மல்யுத்த நடுவர் ஒருவர், 2022-ல் பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதைப் பார்த்ததாக ஊடகமொன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில், பிரிஜ் பூஷண் விவகாரத்தில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்தால் தான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இன்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டே சீனாவில் நடைபெறுவதாக இருந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் சீனாவில் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹரியானாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி மாலிக், “அனைத்து பிரச்னைகளும் தீர்ந்தால் தான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்போம். ஒவ்வொரு நாளும் நாங்கள் மனதளவில் என்னென்ன அனுபவிக்கிறோம் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று கூறினார்.