சென்னை நொளம்பூரில் நகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் உட்பட பல பிசினஸ்களை ஏ.ஆர்.டி என்ற பெயரில் செய்து வந்தவர்கள் ராபின், ஆல்வின். இவர்கள், ஒரு லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்துவந்தனர். அதை நம்பி ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்தனர். மேலும், இந்த முதலீடு திட்டத்தில் சிலர் தங்களுக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்தனர். அதற்கு அவர்களுக்கு (ஏஜென்ட்) கமிஷன் தொகையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு வட்டி கொடுக்கப்படவில்லை. அதனால் முதலீடு செய்த தொகையைக் கேட்டு முதலீட்டாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். அதனால் ராபின், ஆல்வின் மற்றும் ஏஜென்ட்கள் தலைமறைவாகினர்.
இதையடுத்து, மோசடிக் கும்பல்மீது லோக்கல் காவல் நிலையங்களிலும் பொருளாதாரக் குற்றப்பிரிவிலும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தனர். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து ராபின், ஆல்வின் மற்றும் ஏஜென்ட்களைத் தேடிவந்தனர். அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமலிருக்க லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராபின், ஆல்வின் ஆகிய இருவரையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். அவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். முதலீடாகப் பெற்ற தொகை குறித்து விசாரணை நடந்துவருகிறது.
இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், “கைதுசெய்யப்பட்ட ராபின், ஆல்வின் ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் பிரபல தொலைக்காட்சியில் விளம்பரம் செய்துவந்தனர். மேலும், ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் வாரந்தோறும் 4,000 ரூபாய் வட்டியாகத் தருவதாகவும், அதோடு சில கவர்ச்சிகரமான பல முதலீட்டுத் திட்டங்களை அறிவித்து பொதுமக்களை நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குச் சொந்தமான இடங்கள் அலுவலகங்களை ஏற்கெனவே சீல் வைத்திருந்தோம். அந்த இடங்களுக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தோம். அப்போது சில முக்கிய முதலீட்டு ஆவணங்கள் கிடைத்தன. அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.