கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திலுள்ள வீரணம்பட்டியில் பிரசித்திப்பெற்ற காளியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. தற்போது, இந்தக் காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழாவில், கோயில் அமைந்திருக்கும் உள்ளூர் வீரணம்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல், அந்த கிராமத்தில் பெரும்பான்மையாக வாழும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் வசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், தொடர்ச்சியாக சாதியப் பிரச்னைகள் இருந்து கொண்டே இருப்பதாகவும் பட்டியலின மக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. தங்களைக் கோயிலுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்றும் பட்டியலின மக்கள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.

அமைதிப் பேச்சுவார்த்தை

இந்த நிலையில், இன்று திருவிழா நடைபெற்ற அந்தக் கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் ஒருவர், மாற்றுச் சமூகத்தினர் சட்டையைப் பிடித்து, ‘கோயிலுக்குள் வரக்கூடாது’ என்று வெளியே தள்ளியதாகச் சொல்லப்படுகிறது.

சாமி கும்பிட்டுவிட்டு திருநீர் கேட்டபோதும் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் அதிகாரிகள், அந்த கிராமத்துக்குச் சென்றனர். ஆனால், அதிகாரிகளிடம் திருவிழாவை நடத்தும் மக்கள், `பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டோம்’ என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

பூட்டப்பட்ட கோயில்

இதனால், பட்டியல் சமூக மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, இருதரப்பு மக்களிடமும் பேசி பிரச்னையை சுமுகமாக முடிக்கும் வரையில், கோயில் திருவிழாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததோடு, கோயிலையும் தற்காலிகமாக அதிகாரிகள் பூட்டினர். தொடர்ந்து அதிகாரிகள், இருதரப்பு மக்களிடமும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.