வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள்மீது மக்கள் அபரிமிதமாக அன்பு வைத்திருப்பார்கள். நாயிக்காக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் செலவு செய்பவர்கள் ஏராளமானோர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மும்பை அருகில் உள்ள டோம்பிவலி என்ற இடத்தில் வசிப்பவர் ரஞ்சித் (22). இவரின் சகோதரி கீர்த்தி ரவீந்திரன் (16).
இவர்கள் வீட்டில் செல்லமாக ஒரு நாயை வளர்த்து வருகின்றனர். அந்த நாயை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அங்கு இருக்கும் குளத்திற்கு எடுத்துச்சென்று குளிப்பாட்டிக்கொண்டு வருவது இவர்களின் வழக்கமாகும். நேற்று மாலையும் இவர்கள் இரண்டு பேரும் தங்களது நாயை குளிப்பாட்ட ஸ்கூட்டியில் குளத்திற்கு வந்தனர். அவர்கள் நாயை குளிப்பாட்டிக்கொண்டிருந்த போது கீர்த்தி எதிர்பாராத விதமாக சற்று ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.
அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் நீரில் மூழ்க ஆரம்பித்தார். உடனே ரஞ்சித் விரைந்துச் சென்று தன்னுடைய சகோதரியை காப்பாற்ற முயன்றார். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டு பேரும் நீரில் மூழ்கிவிட்டனர். அந்த நேரத்தில் குளத்தில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. கரையில் நின்று கொண்டிருந்த அவர்களின் நாய் தொடர்ந்து தண்ணீரை பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் அந்த வழியாக வந்தவர்கள் சந்தேகப்பட்டு அங்கு வந்தனர். அங்கு ஸ்கூட்டர் ஒன்றும் கவனிப்பாரற்று நின்று கொண்டிருந்தது.
எனவே ஏதோ விபரீதம் நடந்திருக்கவேண்டும் என்று நினைத்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒன்றரை மணி நேரம் தண்ணீரில் தேடி இரண்டு பேரின் உடலையும் மீட்டனர். இரண்டு பேரும் நாயை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்த்து வந்தனர். இது குறித்து அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தயானந்த், “சகோதரன், சகோதரி இரண்டு பேரையும் என்னுடையக் குழந்தைகள் போல் பார்த்து வளர்த்து வந்தேன்.
அவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர்கள் இறந்ததை இன்னும் அவரின் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. பெற்றோர் சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்றிருக்கின்றனர். இருவரின் உடலையும் இறுதிச்சடங்கிற்காக கேரளா கொண்டு செல்ல இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இருவரும் ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கியதால்தான் இந்த விபரீத முடிவு ஏற்பட்டது என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். ரஞ்சித் டாக்டருக்கு படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.