பண மோசடி, வங்கி மோசடி, ஆன்லைன் மோசடி…என ஏகப்பட்ட மோசடிகள் தினம் தினம் நடந்துவருகிறது. இப்படி இந்தியாவில் நடந்துவரும் ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்து நொய்டாவைச் சேர்ந்த ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்னும் ஆய்வு நிறுவனம் சர்வே ஒன்றை நடத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 331 மாவட்டங்களை சேர்ந்த 32 ஆயிரம் குடும்பத்தினர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஆய்வில் 66 சதவீத ஆண்கள் மற்றும் 34 சதவீத பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில்,
-
கடந்த மூன்று ஆண்டுகளில் அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ நிதி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த ஆய்வில் கலந்துக்கொண்ட 39 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டின் ஆய்வில் 42 சதவீதம் பேர் மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
இந்த ஆய்வில் 23 சதவீதம் பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மோசடியில் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். மேலும் 10 சதவீதம் பேர் ஏ.டி.எம் கார்டு மோசடியிலும், 10 சதவீதம் பேர் வங்கி கணக்கு மோசடியிலும் சிக்கியதாக தெரிவித்துள்ளனர்.
-
13 சதவீதம் பேர் ஆன்லைனில் ஏதாவது வாங்கும்போதோ, விற்கும்போதோ அல்லது சில வலைதள பயனாளர்களால் தங்களுக்கு மோசடி நடந்ததாக கூறியிருக்கிறார்கள். 16 சதவீதம் பேர் வேறு சில மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
மோசடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில், 24 சதவீதம் பேர் தாங்கள் இழந்த பணத்தை மீண்டும் பெற்றுள்ளனர். மேலும் 70 சதவீதம் பேருக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
-
18 சதவீதம் பேர் தங்களுக்கு நடந்த ஆன்லைன் மோசடியை குறிப்பிட்ட நிறுவனத்திடமோ அல்லது தளத்திலோ புகார் செய்து ஏமாந்த பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். 6 சதவீதம் பேர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்து பணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
-
41 சதவீதம் பேரின் ஆன்லைன் மோசடி புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 17 சதவீதம் பேருக்கு புகார் செய்ய யாரை அணுக வேண்டும்? என்பது தெரியவில்லை. மேலும் 12 சதவீதம் பேர் ஆன்லைன் மோசடி குறித்து புகார் செய்யக்கூட தயாராக இல்லை.
-
இப்போது பெரும்பான்மையான மோசடிகள் கார்டு மூலமும், இணையம் மூலமும் தான் நடக்கிறது. கூடுதலாக பண மோசடிகளும் அதிகரித்து வருகிறது.
என்று கூறப்பட்டுள்ளது.
2022-23 நிதியாண்டின் முதல் பாதியில், ரூ.19,485 கோடி மதிப்புள்ள 5,406 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது. 2021-22 நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.36,616 கோடி மதிப்புள்ள 4,069 மோசடி வழக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாத அறிக்கைபடி, வங்கி மோசடியில் ஈடுப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு குறைந்திருந்தாலும், மறுபக்கம் பிற மோசடிகள் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளது.
ஆக மக்களே மோசடிகளில் இருந்து ஜாக்கிரதையாக இருங்க!