“காவல்துறையினரின் செயல்பாட்டில் குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன்” – சட்டப்பேரவையில் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திமுக-வின் இரண்டு ஆண்டு கால ஆட்சி இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக இருக்கிறது. திராவிட மாடல் என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது. மொழி உரிமை, இன உரிமை என்பதே சாசனம். இலவச மின்சாரம் கிடைக்கிறது.பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது.
காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றம் குறை இருக்கலாம், குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இறுதிக்கட்டத்தை எட்டும் வேங்கைவயல் விவகாரம்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு,டிசம்பர் மாதம் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில், மனித கழிவுகள் கலந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், சிபிசிஐடியின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் நான்கு மாதங்கள் ஆகியும் கைது செய்யப்படாத சம்பவம் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.
இதனிடையே சிபிசிஐடி போலீஸார் தங்களுடைய விசாரணையில் 11 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் வேங்கைவயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்ற நீர் பகுப்பாய்வு மையம் வெளியிட்டுள்ள சோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், 2 பெண்கள் உட்பட 11 பேரின் டிஎன்ஏ பரிசோதனையும் நடைபெற இருக்கிறது. அதே மாதிரி குரல் மாதிரி பரிசோதனையும் இன்று நடத்தப்பட இருக்கிறது. இதனால் வேங்கைவயல் விவகாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.