நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்றபோது, அபூர்வ வகை மான்களை வேட்டையாடினார். இது தொடர்பான வழக்கை கோர்ட் விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. ஆனால், சல்மான் கான் வேட்டையாடிய மான்களை, பிஷ்னோய் இன மக்கள் புனிதமாக கருதுகின்றனர். எனவே டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற கிரிமினல், சல்மான் கானுக்கு பல முறை கொலை மிரட்டல் விடுத்திருக்கிறான். அவனிடம் மும்பை போலீஸார் விசாரணையும் நடத்தியிருக்கின்றனர். இதில் சல்மான் கானை ஆட்களை அனுப்பி கொலைசெய்ய முயன்றதும் தெரியவந்திருக்கிறது.
இதனால் சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு தனது பாதுகாபுக்காக சல்மான் கான் சமீபத்தில் குண்டு துளைக்காத கார் ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது மீண்டும் சல்மான் கானுக்குக் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர், தனது பெயர் `ரோஹி பாய்’ என்றும், வரும் 30-ம் தேதி சல்மான் கான் கொலைசெய்யப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.
உடனே போலீஸார் இந்த மிரட்டல் குறித்து விசாரணையில் இறங்கினர். போன் செய்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர்.
அவர், தானே மாவட்டத்திலுள்ள சஹாப்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவனைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.