குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கிவிடும். அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?
கொடுக்க வேண்டிய மாத்திரையை முதலில் நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள். பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்துவைத்த மாத்திரைத் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக்குக் கொடுக்கலாம்.
டெட்ராசைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது சேர்த்துத் தரலாம். இதுபோன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, மருந்தின் அளவு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி, நேராகப் படுக்கவைத்த நிலையில் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் தலைக்கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.
மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது. வலிப்பு (Fits) பிரச்னை உள்ள குழந்தைக்கு, வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது.
காசநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு, மருந்து கொடுக்கும்போது, தேன் கலந்து தரக்கூடாது. காசநோய்மருந்துகளில் உள்ள உட்பொருளான ஐசோனியாசிட்டின் வீரியத்தை, தேன் குறைத்துவிடும்.
பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக்கூடாது.
மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன்படி மட்டுமே கொடுக்க வேண்டும்.