ஹரியானாவைச் சேர்ந்த நீலம் (23) என்ற பெண், தேர்வெழுதி கனடாவில் வேலைக்காகச் சென்றார். அவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்தார். அவர் ஹரியானாவின் ரோஹ்டக் மாவட்டத்திலுள்ள பாலண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவராவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை. நீலம், சுனில் என்பவரைக் காதலித்துவந்தார். நீலம் பல நாள்களாக வீட்டுக்கு வராததால் அவருடைய சகோதரி ரோஷ்னி பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால் தன்னுடைய சகோதரியைக் காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார்.

கொலை

ஆனால் போலீஸார் வழக்கு பதிவுசெய்துவிட்டு நீலமை தேட எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கனடாவில் வேலை செய்துகொண்டிருந்த நீலத்தைக் காதலித்து இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலைசெய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தங்களது புகாரில் குறிப்பிட்டிருந்தனர். நீலம் காணாமல்போன அதே நாளில் அவருடைய காதலன் சுனிலும் காணாமல் போயிருந்தார். நீலம் குடும்பத்தினர் மாநில உள்துறை அமைச்சர் அனிலைச் சந்தித்து, இது தொடர்பாக முறையிட்டனர். உடனே இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

போலீஸார் நீலத்தின் காதலன் சுனிலைத் தேடிக் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நீலத்தைக் கடத்திச் சென்று கொலைசெய்ததாகத் தெரிவித்திருக்கிறார். அதோடு தடயத்தை மறைப்பதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டி நீலத்தின் உடலைப் புதைத்துவிட்டதாகத் தெரிவித்தார். உடனே போலீஸார் அவர் சொன்ன இடத்தில் குழி தோண்டிப் பார்த்தபோது நீலத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

அதையடுத்து டி.என்.ஏ பரிசோதனைக்காக உடல் மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது. சுனிலைக் கைதுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவரும் போலீஸார், இது குறித்துப் பேசுகையில், “சுனில்மீது கொலை, ஆயுதம் வைத்திருத்தல் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன” என்று தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.