உலக அளவில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி எச்சரிக்கை விடும் விதமாக, வல்லரசு நாடுகளையெல்லாம் தன்பக்கம் கவனம் ஈர்க்கச் செய்யும் நாடு வடகொரியா. அதேபோல சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அதை மீறுபவர்களுக்கு சில நேரங்களில் மரண தண்டனை கூட விதிக்க உத்தரவிடுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜாம் உன்.
உதாரணமாக அதிபர் கிம் ஜாம் உன், தன்னுடைய தந்தையின் நினைவு நாளையொட்டி ஒரு வாரத்துக்கு யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது என உத்தரவிட்டார். அதேபோல சமீபத்தில், தன்னுடைய மகளின் பெயரை யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும், அப்படி யாரேனும் வைத்திருந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹைசான் (Hyesan) நகரத்துக்கு மட்டும் லாக்டவுன் அறிவித்திருக்கிறார் கிம் ஜாம் உன். கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 10-ம் தேதிக்கு இடையில், ஹைசான் நகரத்திலிருந்து ராணுவம் முழுமையாக வெளியேறிய போது, மார்ச் 7-ம் தேதியன்று 653 தோட்டாக்கள் தொலைந்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அதிபர் கிம் ஜாம் உன், தொலைந்த தோட்டாக்களை கண்டுபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அந்த உத்தரவில், 653 தோட்டங்களும் கண்டுபிடிக்கப்படும் வரை, நகரத்தில் லாக்டெளன் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் அதிகாரிகளும், காணாமல் போன தோட்டாக்களை வீடு வீடாகத் தேடிவருகின்றனர்.