திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குடிபோதையில் கத்தியுடன் நுழைந்து பக்தர்களை மிரட்டிய நபரால், பக்தர்கள் பயந்து அங்கிருந்து ஓடத்தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கார்த்திகை தீபம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் மட்டுமல்லாமல் எல்லா நாட்களுமே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். அப்படி வருவோர், தலைவாசல் கோபுரத்தை வணங்கி வழிபடுதல் வழக்கம். முக்கியமான முகூர்த்த தினங்களில் முழுமையாக திறந்திருக்கும் கோயில் நடையானது, மற்ற அனைத்து நாட்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறந்து மூடப்படும். இருப்பினும்கூட அங்கு எப்போதும் பக்தர்களின் எண்ணிக்கையானது கணிசமாக இருந்துகொண்டேதான் இருக்கும்.
அப்படி இன்றும் பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் பெருமளவில் இருந்தனர். அப்போது அவர்கள் வழிபட்டுக்கொண்டிருக்கும் போது, அண்ணாமலையார் கோயிலில் வெளி பிரகாரத்தில் இருக்கும் நான்கு கோபுரங்களில் ஒன்றான தெற்கு திருமஞ்சன கோபுரத்தின் வழியாக அப்பு என்கிற நபர் மது குடித்துவிட்டு, போதையிலேயே கத்தியுடன் நுழைந்துள்ளார். அவர் கத்தியுடன் அங்குமிங்கும் பக்தர்களை மிரட்டியபடி ஓடியதால் பக்தர்கள் பயந்து சிதறி ஓடியுள்ளனர்.
ஒருகட்டத்தில் கோயிலில் நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்த அந்த குடிகாரர், அங்கிருந்த கண்ணாடிகளை சுக்கு நூறாக உடைத்து சேதப்படுத்தி உள்ளார். இதனை கண்ட கோயில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் வந்து அந்நபரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அண்ணாமலையார் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.