பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.8 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக் ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையத்தில் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் அதிர்வானது அதனை சுற்றிய பரப்பில் 1000 கி.மீ வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி போன்ற இடங்களில் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்கிற அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆழமானது 180 கி.மீ என பாகிஸ்தான் வானிலை மையம் கணித்திருக்கிறது. பாகிஸ்தானின் லஹோர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, கியேட்டா, பேஷாவார், கோஹாத், லக்கி மர்வாத் மற்றும் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. இவைதவிர குஜ்ரன்வாலா, குஜ்ராத், சியால்கோட், கோட் மோனின், மத் ரஞ்சா, சாக்வல், கோஹட் மற்றும் கில்ஜித் – பால்திஸ்தான் பகுதிகளில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்த வீடியோக்கள் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்திய வடமாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்துவிழுந்ததில் 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது ராவல்பிண்டி மார்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லமாபாத்தில் 6.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.