கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற இமாலய சாதனையை ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று நம்புவதாக பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் குவித்த 100 சதங்களை முறியடிப்பதேல்லாம் கோடியில் ஒருவன் வந்தால் கூட அடிக்க முடியாத காரியமாகவே, விராட் கோலி என்ற ஒரு வீரன் வரும் வரை பார்க்கப்பட்டது. சதங்களை அடிப்பதை எல்லாம் மிகவும் எளிதான காரியமாக களத்தில் வெளிக்காட்டிய விராட் கோலி, சதங்களின் எண்ணிக்கையை மளமளவென உயர்த்தி காட்டினார். முன்னாள் ஜாம்பவான்கள் எல்லாம் சதங்களை அடிக்க அதிக போட்டிகள் எடுத்துக்கொண்டபோது, அதை எல்லாம் குறைவான போட்டிகளில் செய்துகாட்டி கிரிக்கெட் உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்து கொண்டிருந்தான் விராட் கோலி என்ற அந்த இளைஞன்.
வரிசையாக கோலி சதங்கள் மேல் சதங்களாய் அடித்திக்கொண்டிருக்க, ‘இவ்வளவு சதங்களை எல்லாம் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தான் அவரால் அடிக்க முடியும், டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் முடியவே முடியாது’ என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டது. ஆனால் சதங்களின் எண்ணிக்கையை டெஸ்ட் போட்டிகளிலும் அடுக்கடுக்காக அவர் அடிக்க, ‘உண்மையில் இந்த வீரன் காலத்திற்கும் சிறந்தவன் தான்’ என்ற கூற்றை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு காலத்திலும் ஒரு சிறந்த வீரன் இருப்பான், பின்னர் அவன் ஒரு ஜாம்பவானாக மாறுவான். ஆனால் காலங்கள் கடந்ததும் அந்த முன்னாள் வீரனின், ஜாம்பவானின் சாதனைகளை முறியடிக்க, புதியதாக ஒரு வீரன் உதயமாகத்தொடங்குவான். ‘நீங்கள் தான் முன்னாள் ஜாம்பவானா? அப்படியே நின்று என் ஆட்டத்தை வேடிக்கை பாருங்கள்’ என, புதிய வீரன் பழைய ஜாம்பவானை விட ஒருபடி மேலான ஆட்டத்தை வெளிப்படுத்துவான்.
இதுவே தொடர்ச்சியாக சுழற்சி முறையில் பிறகு நடந்தேறும். எல்லா சாதனைகளும் எதிர்காலத்தில் யாரோ ஒருவரால் முறியடிக்கப் போகிறவைதான் என்பது நிதர்சனமானது. அப்படி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கருக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் வந்தார், சச்சினுக்கு பிறகு விராட் கோலி வந்திருக்கிறார். கோலிக்கு பிறகு நிச்சயம் இன்னொரு வீரர் வந்து நிற்பார் என்பது மறுக்கப்படவே முடியாத ஒன்று.
விராட் கோலி தற்போது 75 சர்வதேச சதங்களை அடித்திருக்கும் நிலையில் சச்சினின் 100 சதங்களுக்கு அவருக்கு இன்னும் 25 சதங்கள் மீதமுள்ளன. சச்சின், தனது 100 சதங்கள் அடித்த பிறகு 39 வயதில் தன் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது 34 வயதாகும் விராட் கோலி, இன்னும் 6 முதல் 8 ஆண்டுகள் விளையாடக்கூடுமென கணிக்கப்படுகிறது. அதற்குள் 25 சதங்களை அவர் அடிப்பது சாதாரணமானது என்கின்றனர் அவரது ரசிகர்கள். அந்த அடிப்படையில்தான் “சச்சினின் 100 சதங்களை கோலியால் அடிக்கமுடியும்” என்று கூறியுள்ளார் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர்.
கோலி குறித்து பேசியிருக்கும் அக்தர், “ஒரு கிரிக்கெட் வீரராக கேட்டால், கோலியால் சச்சினின் 100 சதங்களை அடிக்க முடியும் என நான் நம்புகிறேன். கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. அவர் இன்னும் 6 முதல் 8 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினால் நிச்சயம் அவரால் மீதமிருக்கும் 25 சதங்களை அடிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர், “30 முதல் 50 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடும் அளவு விராட் கோலி செயல்பட்டால் போதும். அவருக்கு 25 சதங்கள் என்பது எல்லாம் மிகவும் எளிதாகவே அமைந்துவிடும். ஆனால் அதற்கு அவர் டி20 போட்டிகளில் இருந்து முழுமையாக விலக வேண்டும். எனக்கு புரிகிறது… அவர் அனைத்திலும் தன்னை நிலைநிறுத்த விரும்புகிறார். டி20யில் இருக்க விரும்புகிறார். அதிலும் தன்னை சிறப்பாக வெளிக்காட்ட நினைக்கிறார். ஏனெனில் அவர் மிகவும் உற்சாக மனநிலை கொண்டவர்.
டி20 வடிவம் என்பது அவருடைய உற்சாகமான கேரக்டருக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் விராட் கோலியை பொறுத்தவரையில், அவருடைய ஆற்றலை அதிகளவு டி20 போட்டியானது உறிஞ்சுவதாகவே நான் பார்க்கிறேன். அவர் டி20யிலிருந்து விலகி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.